ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் வசிப்பவர் சேகர் (43). இவர், அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்ளக்சில் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.24 ஆயிரத்து 500 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் சேகர் கடையின் பக்கத்தில் வீரராகவன் என்பவர் சிமெண்ட், ஜல்லி, கம்பி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவரது கல்லாவில் இருந்த ரூ.8 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து இருவரும் பெரியபாளையம் காவல் நிலையறத்தில் புகார் செய்தனர். பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே ஊரில் கடந்த மாதம் சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் திருடுபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.